ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது சிங்கப்பூரில் நான் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுடன் பகலுணவை உட்கொண்டதாக கூறப்படும் செய்தி அடிப்படையற்றதாகும். பகல் உணவை சிங்கப்பூர் எயார் லைனிலேயே பெற்றேன். வேண்டுமென்றால் உணவுப் பட்டியலை எடுத்து வந்து காட்டுகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை உரையாற்றியை எதிர்க்கட்சி உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் குறிப்பிட்ட கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது, எனது பெயரை குறிப்பிட்டு நான் அர்ஜுன மகேந்திரனுடன் சிங்கபூரில் பகல் உணவை உட்கொண்டதாக கூறினர். ஆனால் நான் அன்றைய தினம் காலை குறித்த அமைச்சருடன் காலை உணவை உட்கொண்டேன். பகல் உணவை சிங்கப்பூர் எயார் லைனிலேயே பெற்றேன். வேண்டுமென்றால் உணவு மெனுவையும் எடுத்து வந்து காட்டுகிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இவ்வாறு பொய்யான கருத்தை வெளியிட்டமை தொடர்பில் நான் கவலையடைகிறேன் என்றார்.