மலேசிய அரசாங்கம் இலங்கைக்கு அவசரமாகத் தேவையாகவுள்ள மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிற்கான மருத்துவப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதில் உதவி கோரி இலங்கையின் சுகாதார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மலேசிய அரசாங்கத்தின் ஆதரவை நாடியது.
அதற்கமைய, மலேசிய சுகாதார அமைச்சில் நேற்றுமுன்தினம் (31) நடைபெற்ற நிகழ்வில், மலேசியாவின் இடைக்கால சுகாதார அமைச்சர் கைரி ஜமால்தீன், 63,100 அமெரிக்க டொலர் (2 கோடியே 23 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா) பெறுமதியான மருந்து பொருட்களை மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் (ஓய்வு) சுமங்கலா டயஸிடம் கையளித்தார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் இந்த நன்கொடையை விமானம் மூலம் இலவசமாக கொண்டுவருவதற்கு இணங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கோலாலம்பூரிலிருந்து கொழும்புக்கு யூஎல் 319 என்ற விமானத்தில் இந்த மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.