(எம்.ஆர்.எம்.வசீம்)
இரட்டை பிரஜா உரிமை உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருக்குமானால் அவர்கள் தொடர்பில் பாராளுமன்றம் ஊடாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
நீதிமன்றம் ஊடாக திர்வொன்றை பெற்றுத்தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் இருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அரசியலமைப்பின் 21ஆம் திருத்த சட்டமூலம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தொடர்ந்து செயற்பட முடியாது.
என்றாலும் தற்போதைய பாராளுமன்றத்தில் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் யாராவது இருக்குமானால், அவர்களாகவே அதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளவேண்டும்.
அவ்வாறு இல்லாமல் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு எதிராக பாராளுமன்றம் ஊடாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
அந்த அதிகாரம் எமக்கு இல்லை. ஆனால் இதுதொடர்பாக நீதிமன்றம் சென்று, தற்போதுள்ள பாராளுமன்றத்தில் யாருக்காவது இரட்டை பிரஜா உரிமை இருப்பது தொடர்பில் உறுதிப்படுத்தி, அது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பை பெற்றுத்தருமாக இருந்தால், அதன் பிரகாரம் எனக்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
அதனால் ஒருவரை ஒருவர் விமர்சிக்காமல், பாராளுமன்ற உறுப்பினர்கள் யாருக்காவது இரட்டை பிரஜா உரிமை இருக்குமானால், அவர்கள் அதுதொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதே கெளரவமான செயலாகும் என்றார்.