Our Feeds


Friday, December 23, 2022

ShortTalk

மக்களுடன் ரோட்டுக்கு இறங்குவோம் - SJB, MP மரிக்கார் அரசுக்கு எச்சரிக்கை!



(எம்.மனோசித்ரா)

பொருளாதார நெருக்கடிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மீது மீண்டும் பாரியதொரு சுமையை சுமத்தும் வகையில் மின் கட்டணத்தை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மக்களை வீதிக்கு இறக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாம் மக்களை வீதிக்கு இறக்குவோம். சமூகத்தில் மிகக் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கே பாரியளவில் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. அதிக வருமானம் கொண்டவர்களுக்கு சிறிய தொகையே அதிகரிக்கப்படவுள்ளது.

அதே போன்று தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்குமாயின் , அதற்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுப்போம்.

வேட்புமனு தாக்கலுக்கான தினத்தை அறிவித்தல் , அதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் , அடுத்த இரு வாரங்களுக்குள் தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டு , அதன் பின்னர் பொருளாதார நெருக்கடிகளைக் காரணமாகக் காண்பித்து தேர்தலை காலம் தாழ்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள், ராஜபக்ஷாக்களேயன்றி பொது மக்கள் அல்ல என்பதை அரசாங்கத்திற்கு நினைவுபடுத்துகின்றோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »