Our Feeds


Monday, February 6, 2023

ShortNews Admin

அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களை தொடர்ந்தும் ஆதரிப்பார்கள் - ரோஹித அபேகுணவர்தன



(இராஜதுரை ஹஷான்)


கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சம் வெற்றிப் பெறுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் திங்கட்கிழமை (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கட்சி என்ற ரீதியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்பது குறித்து தனிப்பட்ட முறையில் அவதானம் செலுத்த வேண்டும். வெற்றியோ,தோல்வியோ தேர்தலில் போட்டியிடுவோம்.

தேர்தலை கண்டு அஞ்வச வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்ற தேசிய தேர்தல்களில் அமோக வெற்றிப்பெற்றது. இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அமோக வெற்றிப் பெறுவோம். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்திற்கு அதிக சேவையாற்றியுள்ளது.

ஆகவே நாட்டு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆட்சியதிகாரத்தை மீண்டும் ஒப்படைப்பார்கள். பிரதான நிலை அரசியல் களத்தில் பொதுஜன பெரமுனவிற்கு எந்த அரசியல் கட்சிகளும் சவால் அல்ல, மக்கள் விடுதலை முன்னணி நாட்டில் எவ்வாறான நிலையை தோற்றுவித்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு மக்கள் மத்தியில் செல்ல முடியாத காரணத்தினால் தான் அவர்கள் தேசிய மக்கள் சக்தி என்று பெயரை மாற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

ராஜபக்ஷர்கள் நாட்டுக்கு தீங்கிழைக்கவில்லை. அளப்பரிய சேவையாற்றியுள்ளார்கள். அறிவார்ந்த மக்கள் ராஜபக்ஷர்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சம் வெற்றிப் பெறுவோம் என்றார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »