Our Feeds


Saturday, April 22, 2023

ShortNews

8,000 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் ? - டலஸ் அழகபெரும எழுப்பியுள்ள புதிய சர்ச்சை!



(இராஜதுரை ஹஷான்)


எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் கடன் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய இன்னும் 27 நாட்கள் மாத்திரமே மிகுதியாக உள்ளன.

வழக்கு தாக்கல் செய்வதை தடுப்பதற்கு 8,000 ஆயிரம் கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சிங்கள இலங்கையர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என  பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் சபையின் உறுப்பினர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.

நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021 ஆம் ஆண்டு மே மாதம் நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்கு உள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த கப்பல் விபத்தினால் சமுத்திர வளங்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்து நட்டஈடு மதிப்பீடு செய்ய நியமிக்கப்பட்ட குழுவினர் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

கப்பல் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலர் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என துறைசார் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளார்கள். வழக்கு தாக்கல் செய்து நட்டஈடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக சிங்கள இலங்கையர் ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் அதாவது இலங்கையின் நாணய அலகின் பிரகாரம் 8,000 கோடி ரூபா  இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளமை அவதானத்துக்குரியது.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தி தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ள 2.9 பில்லியன் டொலரை காட்டிலும் இந்த கப்பல் நிறுவனத்திடமிருந்து 6.4 பில்லியன் டொலரை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

8,000 கோடி இலஞ்சம் பெற்ற நபர் யார் என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.நாட்டை சீரழித்து ஒரு தரப்பினர் இலாபம் பெறுவதை தேச துரோக செயற்பாடாக கருத வேண்டும்.

எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பலில் இருந்த 7,480 கொள்கலன்கள் கடலுக்குள் மூழ்கியுள்ளன. இதனால் இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான 80 ஆயிரம் மெற்றிக் தொன் இரசாயன பதார்த்தங்கள் கடலுக்குள் சேமிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து 1,400 மெற்றிக்தொன் மாத்திரமே கரையொதுங்கியுள்ளன. மிகுதி இரசாயன பதார்த்தங்கள் இலங்கையின் கடல் வளத்துக்கு அழிவை ஏற்படுத்த கடலுக்குள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன.

கப்பல் விபத்தினால் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்வதற்கு இன்னும் 27 நாட்கள் மாத்திரமே மிகுதியாக உள்ளன.

சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றதன் பின்னர் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. பேராசிரியர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதாக அச்சுறுத்தும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விவகாரத்தில் சட்டத்தின் பிரகாரம் வழக்கு தாக்கல் செய்ய விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »