Our Feeds


Saturday, June 3, 2023

ShortNews Admin

புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதை அலட்சியப்படுத்தியதால் தான் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம்பெற்றது - ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா



(இராஜதுரை ஹஷான்)


புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டதை அலட்சியப்படுத்தியதால் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.

ஆகவே மதங்களை அவமதிக்கும் கருத்துக்களை இனியொருபோதும் அலட்சியப்படுத்த கூடாது. ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தால் பத்து ஆண்டுகள் சிறை செல்ல நேரிடும் என ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கருத்து சுதந்திரம் உள்ள காரணத்திற்காக மதங்களையும்,தனிப்பட்ட நபர்களையும் அவமதிக்க முடியாது.

அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரம்,பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை ஒருதரப்பினர் தவறாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கருத்து சுதந்திரம் பற்றி தற்போது வாதப்பிரதிவாதங்களை முன்னெடுப்பவர்கள் உரிமை,சுதந்திரம் ஆகியற்றுக்கான வரைவிலக்கணத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துக்கள் அண்மை காலமாக தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.

பௌத்தர்களை வெறுப்படைய செய்து,மதங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கத்துடன் ஒருதரப்பினர் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள்.

நகைச்சுவைக்காக மதங்களையும் மத கோட்பாடுகளையும் எவ்வாறு அவமதிக்க முடியும்.அவரவர் மதம் சார்ந்த விடயங்கள் உணர்வுபூர்வமானது.

பிறிதொரு மதத்தவர் தமது மதத்தை அவமதிப்பதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஆகவே மதங்களை அவமதித்தால் சமூக கட்டமைப்பில் தேவையில்லாத முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஒருசில காரணிகளை முன்னிலைப்படுத்தி சிலை உடைப்பு விவகாரம் அலட்சியப்படுத்தப்பட்டதால் ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் ஊடாக பாரிய விளைவுகள் ஏற்பட்டன. ஆகவே மத காரணிகளை ஒருபோதும் அலட்சியப்படுத்த முடியாது.

மதங்களை அவமதிக்கும் தரப்பினருக்கு எதிராக ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் பத்து ஆண்டுகள் நிச்சயம் சிறை செல்ல நேரிடும்.இந்த சட்டத்தின் பிரகாரம் கைது செய்யப்படுபவர்களுக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்றத்துக்கு கிடையாது.

பிரத்தியேக அறிவுறுத்தலுக்கு அமைய மேன்முறையீட்டு நீதிமன்றத்திடமே பிணை பெற்றுக்கொள்ள முடியும்.பேச்சு சுதந்திரம் உள்ளது என்ற காரணத்துக்காக விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »