அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பல் சிதைவுகளை பார்வையிட சென்ற நீர்மூழ்கி கப்பல் மாயமானது. அதில் உள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
சுற்றுலா பயணிகளும் சென்று டைட்டானிக் கப்பலின் சிதைந்த பாகங்களை பார்க்க சில கப்பல் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து வருகின்றன.
இதற்காக ஆழ்கடல் பயணங்களை ஏற்பாடு செய்யும் அமெரிக்காவின் ஓசன்கேட் நிறுவனம் பிரத்யேக நீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது.
8 நாள் பயணமான இந்த சுற்றுலாவிற்கு ஒரு நபருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் டொலர் (சுமார் ரூ.2 கோடி) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து இங்கிலாந்து கோடீஸ்வரரும், ஆராய்ச்சியாளருமான ஹமிஷ் ஹார்டிங் உட்பட 5 பேர் நீர்மூழ்கி கப்பலில் அழைத்து செல்லப்பட்டனர். இந்த கப்பல் புறப்பட்டு 1 மணி நேரம் 45 நிமிடங்கள் ஆனதும் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த நீர்மூழ்கி கப்பலை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. எனவே கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, கனடா கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் விமானங்கள், நீர்மூழ்கி கப்பல் போன்றவையும் இந்த தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன.
இது குறித்து ஓசன்கேட் நிறுவனம் தெரிவிக்கையில்,
நீர்மூழ்கி கப்பலில் 40 மணி நேரத்துக்கு குறைவான ஓக்சிஜன் இருப்பு மட்டுமே உள்ளது. எனவே கப்பலில் இருந்தவர்களை உயிருடன் மீட்க சிக்னல் துண்டிக்கப்பட்ட இடத்தை சுற்றிலும் தீவிர தேடுதல் வேட்டை இடம்பெற்று வருகிறது. இதற்கு அரசாங்கம் மற்றும் ஆழ்கடல் நிறுவனங்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
