Our Feeds


Thursday, July 6, 2023

SHAHNI RAMEES

37 பில்லியன் டொலர் கடன் நிலுவையில்....

 

சர்வதேச கடன்களை மீளச் செலுத்தும் வேலைத்திட்டத்துக்கமைய 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியில் அரசாங்கம் செலுத்தியிருக்கவேண்டிய மொத்த கடன் தொகை 37 பில்லியன் அமெரிக்க டொலராகும். அதனடிப்படையில், 37 சதவீதத்தை எதிர்வரும் ஐந்து வருடங்களில் மீளச் செலுத்த வேண்டியது அவசியமாகும். 



யாராவது ஆட்சிப் பொறுப்பேற்று அறியாமையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் திரிபுபட்டு இணக்கப்பாடுகள் சிக்கலுக்குள்ளானால் 30 நாட்களுக்கு மேல் அந்த அரசாங்கத்தை யாராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதுடன் அடுத்த தேர்தலில் முன்னிலையாகும் அரசியல் கட்சி அல்லது குழு சார்பானவர்கள் கட்டாயம் அவர்களின் தேர்தல் கொள்கைத் திட்டத்தில் கடன் மீள்செலுத்துகை தொடர்பில் முறையான திட்டங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.



அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.



அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



எமது நாட்டிலிருந்த ஒவ்வொரு அரசாங்கமும் தேசிய மற்றும் சர்வதேச கடன்களைப்பெற்றே நாட்டிலுள்ள அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பெற்ற கடன்களை மீளச் செலுத்தி வந்தாலும் செலுத்த முடியாதளவுக்கு கடன் பெறப்பட்டது. நாளாந்த செயற்பாடுகளுக்குத் தேவையான வருமானம் எம்மிடம் இல்லாததால் அதற்காக எந்த அரசாங்கமாக இருந்தாலும் கடன்பெற்றே ஆகவேண்டும்.



பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த முடியாத சந்தர்ப்பங்களில் அதற்கான சர்வதேசத்தில் அதிக வட்டியில் மீண்டும் கடனை பெற்றுக்கொண்டோம்.



அதற்கமைய, 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி 1250 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திகதி 1000 மில்லியன் டொலரும் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி 500 மில்லியன் டொலரும் மீளச் செலுத்த வேண்டியுள்ளது.



2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03ஆம் திகதி 650 மில்லியன் டொலர் கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 03ஆம் திகதி 1500 மில்லியன் டொலர் கடன் தொகையை மீளச் செலுத்தவேண்டியுள்ளது. 2026 ஆம் ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதி 1000 மில்லியன் டொலரும் 2027ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி 1500 மில்லியன் டொலரும் 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி 1250 மில்லியன் டொலரும் 2029 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் திகதி 1400 மில்லியன் டொலரும் 2030 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி 1500 மில்லியன் அமெரிக்க டொலரும் செலுத்த வேண்டியுள்ளது.



ஆகவே, 2025ஆம் ஆண்டு வரை நாட்டை யார் ஆட்சி செய்தாலும் இந்த கடன்களை மீளச்செலுத்துவதற்கு அவர்கள் சட்ட ரீதியாக கடமைப்பட்டுள்ளார்கள். இதிலுள்ள பாரதூர தன்மையை நாடென்ற அடிப்படையில் நாம் சகலரும் புரிந்துகொள்ள வேண்டும்.



2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் மீள்செலுத்தவேண்டிய 37 பில்லியன் அமெரிக்க டொலர் நிலுவையில் இருக்கிறது. இந்த 37 பில்லியன் டொலரில் நூற்றுக்கு 37 சதவீதத்தை எதிர்வரும் ஐந்து வருடங்களில் மீளச் செலுத்த வேண்டியது அவசியமாகும். 



மீதம் 51 சதவீதத்தை எதிர்வரும் ஆறு முதல் 20 வருடங்களில் செலுத்த வேண்டும். 12 வீதத்தை 20 வருடங்களின் பின்னர் செலுத்த வேண்டும். அவ்வாறாயின் 2044 ஆம் ஆண்டு வரை இந்த கடன்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. 



எனவே, போலியான தகவல்களினூடாக மக்கள் ஏமாறுவதை தவிர்ப்பதற்காக, எதிர்காலத்தில் க அரசாங்கத்தைப் பொறுப்பேற்பதற்கு முன்வரும் அரசியல் கட்சி அல்லது குழுவின் சார்பில் பிரசன்னமாகும் நபர் இந்த கடன் தொகையை எவ்வாறு முறையாக செலுத்துவது என்பது தொடர்பில் அவர்களின் தேர்தல் பிரசாரங்களில் உள்ளடக்கி அதனை செலுத்தும் முறையையும் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். 



அவ்வாறு இல்லாவிட்டால் நாடென்ற வகையில் சர்வதேச மட்டத்தில் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்படும்.



2044 ஆம் ஆண்டு வரையில் செலுத்த வேண்டியுள்ள கடன்களை மீளச் செலுத்துவதற்கு சரியான திட்டங்கள் இல்லையென்றால் கறுப்பு பட்டியலில் உள்ளிடப்படுவோம். விரும்பியோ விரும்பாமலோ எமக்குத் தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். 



இந்நிலையில், யாராவது ஆட்சி பொறுப்பேற்று அறியாமையினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் திரிபுபட்டு இணக்கப்பாடுகள் சிக்கலுக்குள்ளானால் 30 நாட்களுக்கு மேல் அந்த அரசாங்கத்தை யாராலும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »