Our Feeds


Wednesday, July 5, 2023

ShortNews

முத்துராஜா இனி இலங்கை வராது - தாய்லாந்து அரசு அறிவிப்பு



தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட முத்துராஜா என்ற யானையை மீண்டும் இலங்கைக்கு அனுப்பப்போவதில்லையென தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் இலங்கையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட முத்துராஜா தற்போது தாய்லாந்து மன்னரின் பாதுகாப்பில் உள்ள நிலையில், இலங்கைக்கு மீளவும் அனுப்பப்படமாட்டாது என அந்நாட்டு இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட் சில்பா-ஆர்ச்சா தெரிவித்துள்ளார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா, இலங்கையில் 22 வருடங்கள் வாழ்ந்த போதிலும் தனது புதிய சூழலை விரைவில் அறிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

 

" முத்துராஜா இப்போது மன்னரின் ஆதரவில் இருக்கின்றது. தற்போது லம்பாங் மாகாணத்தின் ஹாங் சாட் மாவட்டத்தில் உள்ள யானைகள் பாதுகாப்பு மையத்தில் 30 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

 

யானை நல்ல மனநிலையில், தலையை அசைத்து, உணவை இரசித்துக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு, கால்நடை மருத்துவர்கள் முழுமையான சோதனைகளை மேற்கொள்வார்கள்.

 

முத்துராஜாவுக்கு வலது கண்ணில் கண்புரை, அதன் முன் இடது கால் வளைக்க முடியாதது, இடுப்பில் காயம் ஏற்பட்டு நகங்கள் மற்றும் நான்கு கால் பாதங்களிலும் பாதிப்புக்கள் உள்ளதாக முதல்கட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 

இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட இரண்டு தாய்லாந்து யானைகளான ஸ்ரீ நரோங் மற்றும் பிரதுபா ஆகியவை தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து வெளியிட்டுள்ளார்.

 

அவைகளில் ஒன்றுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை அவைகளை கவனித்துக் கொள்ளும் திறன் கொண்டுள்ளதாகத் தெரிகிறது, அவைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகத் தெரிகிறது.

 

இலங்கையில் உள்ள சில பல்கலைக்கழகங்கள் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்து யானைகளைப் பராமரிப்பதற்குத் தங்களுக்குத் திறன்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »