இலங்கை வாழ் முஸ்லிம் இனத்தின் சோனக, மலேய, போரா மற்றும் மேமன் சமூகங்களை உள்ளடக்கிய National Muslim Assembly - NMA என அழைக்கப்படுகின்ற 'இலங்கை தேசிய முஸ்லிம் பேரவை' 2023.07.01 சனிக்கிழமை முன்னிரவு கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கௌரவிப்பு நிகழ்வொன்றை நடாத்தியது.
கடந்த கோவிட் பரவல் காலத்தில் அரசாங்கம் மற்றும் சுகாதாரப் பிரிவினர் உள்நாட்டில் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்ட ஜனாஸாக்கள், ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட சூடுபத்தின சேனை மஜ்மா நகர் தேசிய கொரோனா மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டமை யாவரும் அறிந்ததே.
எரியூட்டப்படும் ஜனாஸாக்களை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு, பின்னர் உள்நாட்டில் அடக்கம் செய்ய அனுமதி கிடைத்ததும், மஜ்மா நகர் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கான வெளிக்கள உதவிகளை சுகாதாரத் தரப்புக்கும், இராணுவத்தினருக்கும், குறித்த ஜனாஸாக்களின் உறவினர்கள் உட்பட பொதுமக்களுக்கும் நெறிப்படுத்திச் செயற்படுத்திய 'கோவிட் ஜனாஸா நலன்புரி அமைப்பினரை' கௌரவிக்கும் முகமாகவே மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சோனக, மலேய, போரா மற்றும் மேமன் சமூகங்களைச் சேர்ந்த பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவர் அமான் அஷ்ரஃப், சுகாதார அமைச்சின் கோவிட் பொறுப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முஃப்தி, மர்ஹூம் அஷ்ரஃப் அவர்களின் துணைவி ஃபேரியல் அஷ்ரஃப், கோவிட் நலன்புரி அமைப்பின் தலைவர் அஃப்ஸல் மரிக்கார், அதன் கொழும்பு மாவட்டத் தலைவர் அஸ்லம் உதுமான், கண்டி மாவட்டத் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் மற்றும் நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்ட மேற்படி நிகழ்வில், கோவிட் நலன்புரி அமைப்பின் மூலம் சமூகத்துக்கும் நாட்டுக்கும் ஆற்றிய அளப்பரிய சேவையை பாராட்டி, அமைப்பின் தலைவர் அஃப்ஸல் மரிக்கார் அவர்களுக்கு NMA பேரவையின் சமூகங்கள் ஒவ்வொன்றும் தம் சமூகங்களின் சார்பாக ஞாபகார்த்த சின்னத்தையும்
பாராட்டுப் பத்திரங்களையும் வழங்கி கௌரவித்தன.


.jpeg)
.jpeg)

.jpeg)
