பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
டீசல் விலை அதிகரிப்பு உள்ளிட்ட ஏனைய கட்டணங்களின் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் பஸ் கட்டணங்களில் திருத்தங்களை மேற்கொள்ள நேரிடும் என அகில இலங்கை தனியார் பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பெற்றோலின் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, “தேசிய கொள்கையின்படி எங்களால் தற்போது பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடியாது.
பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் 2 சதவீதத்தால் மாத்திரமே திருத்தங்களை மேற்கொள்ள முடியும். 10 அல்லது 15 ரூபா அதிகரிக்கப்பட வேண்டும். இந்த மாதத்தில் இருந்து மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டணத்தோடு ஏனைய விலைகளும் அதிகரிக்கும்போது இரண்டு மூன்று வாரங்களுக்குள் நாங்கள் கட்டாயமாக பஸ் கட்டண திருத்தத்திற்கு செல்ல நேரிடும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.