இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது
இலங்கையர் சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இன்று (09) காலை கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சடலம் இஸ்ரேலில் இருந்து டுபாய் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து Fly Dubai விமானம் (FZ-579) மூலம் காலை 08.37 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய சரக்கு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சுஜித் யட்டவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன், இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி உள்ளிட்டோர் இதன்போது உடன் இருந்தனர்.
இந்நிலையில். இறுதிக்கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (11/11) இடம்பெறவுள்ளதாக அவரின் மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்தார்.