Our Feeds


Saturday, April 27, 2024

News Editor

வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனம்! - அமைச்சர் டி.வீ சானக


 வலுசக்தித் துறையை ஒழுங்குபடுத்த சுயாதீன நிறுவனமொன்றை நிறுவத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக தெரிவித்தார்.

குறித்த நிறுவனம், வலுசக்தித் துறையுடன் தொடர்புடைய இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான விடயங்களை ஒழுங்குபடுத்தும் என்றும் அதன் மூலம் நுகர்வோருக்கு நியாயமான சேவையை வழங்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.வீ சானக

தொடர்ச்சியான வலுசக்தி விநியோகத்திற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை தற்போது ஏற்படுத்த முடிந்துள்ளது. எரிபொருள் வரிசைகளின் காலம் முடிந்துவிட்டது. எமது அமைச்சும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் உயர்தர எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், வலுசக்தித் துறையின் இறக்குமதி, தரம், விநியோகம் மற்றும் விற்பனை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு சுயாதீனமான ஒழுங்குமுறை நிறுவனமொன்றின் அவசியத்தை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.

இந்த சுயாதீன நிறுவனத்தை நிறுவுவதன் நோக்கம், நாட்டில் இறக்குமதி செய்யப்படும் மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல், விமான எரிபொருள், LPG, LNG  எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் ஆகியவற்றின் தரம், விநியோகப் போட்டி மற்றும் விலைகளை ஒழுங்குபடுத்துவதாகும்.

வாடிக்கையாளர்களுக்கு முறையான மற்றும் நியாயமான விலையில் வழங்க இது உதவும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதற்கான பிரதான கட்டமைப்பைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்கள் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உலக சந்தை நிலவரங்கள் மற்றும் எரிபொருள் விலையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அறிந்து, அடுத்த 06 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் கொள்வனவு செய்வதற்கான கேள்விமனுப் பத்திரம் கோரப்பட்டுள்ளது.

இம்மாதம் 30 ஆம் திகதியும், அடுத்த மாதம் 13 ஆம் திகதியும் மேலும் இரண்டு மாதங்களுக்கு கேள்விமப் பத்திரம் கோரப்படவுள்ளன. இதன்படி, 2024ஆம் ஆண்டுக்குத் தேவையான எரிபொருளின் தவணைகள் நிறைவு செய்யப்படும். இதன் காரணமாக உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்தாலும் எமது விலைகளில் மாற்றம் ஏற்படாது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மேலும், உலக சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் குறித்து ஆய்வு செய்ய தற்போது இரண்டு குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அக்குழுக்கள் செய்த ஆய்வுகளால் மில்லியன் டொலர்களை எமக்கு சேமிக்க முடிந்தது.

மேலும், கடந்த காலங்களில், எரிபொருள் இறக்குமதியில் கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்பட்டது. காலதாமதமாக கட்டணம் செலுத்துவது தொடர்பான பல்வேறு செய்திகள் தினசரி ஊடகங்களில் வெளியாகின. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கப்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்தப்படவில்லை. நாங்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்தியதே இதற்குக் காரணம்.

தற்போது எரிபொருள் கையிருப்புக்களை ஒரு மாதத்திற்கு பேணி வருகிறோம். ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் வாங்குவதற்கு டொலர்கள் கையிருப்பில் பேணப்படுகிறது. அதன்படி, எங்களிடம் இரண்டு மாதங்களுக்கு போதுமான எரிபொருள் மற்றும் டொலர்கள் உள்ளன.’’ என்று தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »