“ஸ்டெம்" அணுகு முறை ஊடாக "அல்குர்ஆன் தஜ்வீத்" கற்கையில் பாண்டித்தியம் பெற்ற உலகின் முதல் சிறுமியாக தன்னை சான்றுப்படுத்தி சர்வதேச புகழ் பெற்ற "ஸ்டெம்"விருதினை வென்றது மட்டுமன்றி ; இளம் வயதில் பல்துறைகளில் வரலாற்று சாதனைகளை நிகழ்த்தி வருங்கால சந்ததிக்கும், சமூகத்துக்கும் முன்மாதிரியாக திகழ்கின்றமைக்காக கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதை பூர்விகமாக கொண்டு இங்கிலாந்தில் வசித்து வரும் மர்யம் ஜெஸீம் இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிகழவிருக்கும் 2024 ஆம் ஆண்டின் "இன்ஸ்பயர் விருதுகள் " நிகழ்வில் "பல்துறைசார் நட்சத்திரம்" விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார் .
2024 ஆண்டின் வெற்றியாளர்களை தெரிவு செய்யும் குழுவில் மறைந்த மகாராணியாரின் உயர் கௌரவ விருதுகளை வென்ற பேராசிரியர் பில் புக்கனன் OBE, ரோகினி ஷர்மா ஜோஷி OBE, ஜெய் ஏனுகு மற்றும் பிரிஜ் காந்தி, MBE போன்ற புகழ்பெற்ற பிரமுகர்கள் அடங்கி இருந்தனர் . பிரித்தானியாவில் இருந்து கிடைக்கப் பெற்ற பல நூற்றுக்கணக்கான பரிந்துரை விண்ணப்பங்களில் இருந்து கடுமையான மதிப்பீட்டு அளவியல் செய்யப்பட்டு இவ்விருதினை பெற தகுதியான வெற்றியாளராக மர்யம் ஜெஸீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
ஸ்டெம் கல்வி (Science, Technology, Engineering, Mathematics) முறை என்பது விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் துறைகளை ஒருங்கிணைத்த கல்வி முறை ஆகும் .