ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு ராஜபக்ஷர்களின் தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான அரசியல் பேச்சுக்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
“இன்றைய அரசியல் பொருளாதாரத்தில் தீர்மானிக்கப்படுகிறது. வழக்கம் போல் மதம், இனம் என்று பேசி பயனில்லை. நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி தொடர்பிலான தீர்மானம்.
இதை மீட்டெடுக்க எந்தக் கட்சியினால் முடியும் என்பதையே நாம் பார்க்கவேண்டும். இது 1977 தேர்தல் போல, 77 தேர்தலும் பொருளாதார போராட்டத்தினால் நடத்தப்பட்ட ஒரு தேர்தலாகும். அவ்வாறானதொரு நிலை நாட்டில் ஏற்பட்டுள்ளது. எப்படியும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொஹட்டுவ முன்னிலையாகாது. அவர்கள் இறுதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவை வழங்குவார்கள்.
கேள்வி – உங்கள் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கா?
“நான் ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கிறேன். எனக்கு நன்றாக உணரமுடியும்.. எதிர்வரும் நாட்களில் இது குறித்து கூறுகிறேன்.
வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடாது, அவர் ஓய்வு பெறுவார். சமல் ராஜபக்ஷவும் ஓய்வு பெறுகிறார். நாமல் ராஜபக்ஷ எஞ்சியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து பேசி வருகிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பொஹட்டுவவில் 90 வீதமானவர்கள் ராஜபக்ஷ அரசாங்கத்தை அமைக்கும் நிலையில் இல்லை..“