பெரியகுளம் - விருகம்மான வீட்டுத் தொகுதியில் வீடொன்று தீப்பற்றியுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
குறித்த நபர் அன்றைய தினம் வீட்டை பூட்டி விட்டு திருகோணமலை கடற்படை முகாமுக்கு முன்னால் உள்ள தனது கடையில் தங்கியுள்ள நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது வீடு தீப்பற்றி எரிவதாக அவருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இந் நிலையில் இத் தீ சம்பவம் இடம் பெற்றுள்ளதை அறிந்து உடனடியாக பொலிஸ் அவசரப் பிரிவு இலக்கமான 119 க்கு அறிவித்துள்ள நிலையில் தீயணைப்பு பிரிவுக்கும் அறிவித்ததாக குறித்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார். இதில் பல பெறுமதியான வீட்டு உபகரணங்கள் எறிந்து நாசமாகியுள்ளதால் பல இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும் உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை. வீடு தீப்பற்றியமை தொடர்பில் காரணம் இது வரைக்கும் வெளியாகவில்லை.
இச் சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உரிமையாளர் மேலும் தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.