Our Feeds


Sunday, May 26, 2024

ShortNews Admin

இரு கங்கைகளில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் நிலை

 

களனி மற்றும் களு கங்கையை அண்மித்த பகுதிகளில் இன்று கடும் மழை பெய்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் spc சுகீஸ்வர இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், களு மற்றும் களனி கங்கைளின் மேல் பகுதிகளில் உள்ள தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கங்கைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்தால் அந்த கங்கைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், தென்மேற்கு பருவமழையின் தாக்கம் நாட்டின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக அதிகரித்துள்ளதுடன், அதில் 7 பேர் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.

அதேநேரம், கேகாலை அரநாயக்க மாவனெல்ல பிரதான வீதியில் நீர் வழங்கல் சபைக்கு அருகில் உள்ள பலா மரத்தின் ஒரு பகுதி மின்மாற்றி மீது விழுந்துள்ளது. 

இதன் காரணமாக அரநாயக்க பிரதேசத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளின்படி, சுமார் 45,344 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2797 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »