ஐக்கிய மக்கள் சக்தி தான் நாட்டை அழித்த ராஜபக்சர்களுடன் எந்த டீலும் இல்லாத ஒரே கட்சி - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இக்கட்டான காலத்தில் நாட்டைப் பொறுப்பேற்று, நாட்டைச் சரியான பாதையில் திருப்பியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுபவர்களே நாட்டை நாசமாக்கி, நாட்டையே வங்குரோத்தாக்கிய நாசகார குடும்ப ஆட்சியின் துணையுடன் என்றுமே அடைய முடியாத நாற்காலியில் ஏறி, நாட்டை அழித்த திருடர்களைப் பாதுகாத்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணிக்குமே இந்நாட்டை நாசமாக்கிய ராஜபக்சர்களுடன் எந்த டீலும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் புத்திஜீவிகள் ஒன்றியத்தினர், ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழாத்தினர் எடுத்த நடவடிக்கையினால் நாட்டை அழித்தது யார் என்பதை இன்றளவில் உயர் நீதிமன்றத்தின் மூலம் வெளிக்கொணர்நதுள்ளனர். எனவே, பொய்யான கோப்புக் கட்டுகளை எடுத்துக்கொண்டு திருடர்களைப் பிடிப்பதற்கு அதிகாரம் கேட்க வேண்டிய அவசியமில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ராஜபக்ச குடும்பத்தை வெல்ல வைக்க தாம் ஒருபோதும் வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கவில்லை. நாட்டை அழித்த ராஜபக்ச குடும்பத்திற்காக மேடைகளில் ஏறி உரைகளை நிகழ்த்தவில்லை. ராஜபக்சர்களை ஆட்சிக்கு கொண்டு வந்து நாட்டை அழித்த வாய்ச் சொல் தலைவர்கள் தான் இன்று இவ்வாறு 76 வருட வரலாறு குறித்து பேசுகின்றனர்.
விவசாய அமைச்சர்களாகவும், மீன்பிடி அமைச்சர்களாகவும், கலாசார அமைச்சர்களாகவும் செயற்பட்டு, ராஜபக்சர்களின் கைக்கூலிகளாக நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியமைக்கு இவர்களும் துணை போனார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் அரண் வேலைத்திட்டத்தின் மற்றுமொரு கட்டம் இன்று(25) பொலன்னறுவையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.