Our Feeds


Monday, June 3, 2024

SHAHNI RAMEES

காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேலியர்களுக்கு மாலைத்தீவில் தடை...

 


இஸ்ரேல் நாட்டவர்களை மாலைத்தீவுக்குள் நுழைவதைத்

தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.


இதற்கிடையே மாலைத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது.


இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான மாலைதீவு. இந்த நாட்டின் ஜனாதிபதியாக முய்சு கடந்தாண்டு பதவியேற்ற நிலையில், அப்போது முதலே அவரது அரசு பல சர்ச்சை முடிவுகளை எடுத்து வருகிறது


குறிப்பாக இந்திய இராணுவம் மாலைத்தீவில் இருந்து முழுமையாக வெளியேறியே தீர வேண்டும் என்பதில் அவர் மிக உறுதியாக இருந்தார். மேலும், அவ்வப்போது இந்தியாவைத் தாக்கும் வகையிலான கருத்துகளையும் கூறி வந்தார். இதற்கிடையே இப்போது இஸ்ரேல் மாலைத்தீவு இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது.


இஸ்ரேல் மக்கள் தங்கள் நாட்டிற்கு வருவதைத் தடை செய்யும் வகையில் சட்டங்களைத் திருத்த நேற்றைய தினம் முய்சு தலைமையிலான மாலைத்தீவு அரசு முடிவு செய்தது. இது தொடர்பான தகவல் வெளியான உடனேயே தற்போது மாலைத்தீவில் தங்கியுள்ள இஸ்ரேல் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது குறித்துப் பரிசீலிக்குமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், “மாலைதீவு கொண்டு வர உள்ள சட்டத் திருத்தங்களால் தற்போது அங்குள்ள இஸ்ரேல் மக்கள் சிக்கலை எதிர்கொள்ளலாம். இதனால் அந்த நேரத்தில் அவர்களுக்கு உதவுவது எங்களுக்குக் கடினமாக இருக்கும்.. எனவே இப்போதே மாலைத்தீவில் உள்ள இஸ்ரேல் நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இஸ்ரேல் குடிமக்கள் வேறு ஒரு நாட்டில் இரண்டாவது கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் கூட மாலைத்தீவுக்கு வருவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர இஸ்ரேல் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று மாலை மாலைத்தீவு அமைச்சரவை கூட்டம் நடந்த நிலையில், அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.


சுற்றுலாத் துறையை முழுமையாக இருக்கும் மாலைத்தீவு நாட்டிற்கு ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரேலில் இருந்து சுமார் 15,000 சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்தச் சூழலில் தான் அவர்கள் வருகையைத் தடை விதிக்கும் வகையிலான முடிவை மாலைத்தீவு எடுத்துள்ளது.


இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலைத்தீவு. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 5 லட்சம் தான். தீவுகளின் கூட்டமான மாலைத்தீவில் முல்சிம் மக்கள் தொகையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இருப்பினும், யாரும் மாலைத்தீவு போல ஒட்டுமொத்தமாக அந்த நாட்டில் இருந்து வரும் அனைவருக்கும் தடை விதிக்கவில்லை. மாலைத்தீவு தான் முதல் நாடாக ஒட்டுமொத்த இஸ்ரேல் நாட்டவரின் வருகையைத் தடை செய்யும் வகையில் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இப்போது இஸ்ரேல் நாட்டவருக்கு மாலைத்தீவு தடை விதித்துள்ள நிலையில், இஸ்ரேல் பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »