ரோயால் பார்க் கொலை வழக்கில் தண்டனை பெற்று
பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹா சிங்கப்பூரில் இல்லை என இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.ஜூட் ஷ்ரமந்த, பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் விசாரணையின் போது செவ்வாய்க்கிழமை (29) இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிகாரிகள் ஜூட் ஷ்ரமந்தவை நாடு கடத்துமாறு சிங்கப்பூரிடம் கோரிய போதிலும், அவர் தங்கள் நாட்டில் இல்லை என்பதை சிங்கப்பூர் அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர் என சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி சஜித் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜூட் ஷ்ரமந்த தற்போது இருக்கும் இடத்தை கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவு வழங்கி சுமார் ஒரு வருடம் கழித்தும் அவரைக் கண்டுபிடிப்பதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து நீதிபதிகள் எஸ். துரைராஜா, யசந்த கோடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
ஜூட் ஷ்ரமந்த கைது செய்ய பிடியாணையை பெற்று கொள்வதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும், வழக்கின் மூல பத்திரத்தை மீட்டெடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
ஜூலை மாதம் 28 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும், மேலும் வழக்கு விசாரணை முன்னேற்றத்தை அறிக்கையிட சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி பொது மன்னிப்பு இரத்து செய்யப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு விதிக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை முழுமையாக செலுத்திவிட்டதாக உயர் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.