கொத்மலை பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 மில்லியன் இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளதாக பிரதி போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி விபத்துகள் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நிரந்தர திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கம் தற்போது மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
தற்போதுள்ள சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமும், சாரதிகளின் மனப்பான்மையை மேம்படுத்துவதன் மூலமும் இவ்வாறான விபத்துகளை கணிசமாகக் குறைக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதற்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நடந்த இந்த கொடூரமான வீதி விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சகல தொடர்புடைய மருத்துவமனைகளையும் தயார்படுத்தவும், இது தொடர்பாக தேவையான அனைத்து எதிர்கால நடவடிக்கைகளையும் எடுக்கவும் பாதுகாப்புப் படையினருக்கும் சுகாதாரத் துறைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்