நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு, கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அனைத்து கடற்றொழில் சமூகத்தினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையான கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும், கடல் அலைகள் 2.5 முதல் 3 மீற்றர் வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த தினங்களில் காணாமல் போன மீனவர்கள் குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார். அவற்றில்
கடந்த 18ஆம் திகதி சிலாபம் பகுதியிலிருந்து ஒருநாள் தொழிலுக்காகப் புறப்பட்டுச் சென்ற "OFRP-A-2925CHW" படகில் பயணித்த நிஹால் ரஞ்சன் பெர்னாண்டோ மற்றும் ஜூட் லக்ஷ்மன் பெர்னாண்டோ ஆகிய இரண்டு மீனவர்களும் இதுவரை கரை திரும்பவில்லை. மாயமானவர்களை இலங்கை விமானப்படை வானூர்தி மூலம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும், அவர்களைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
அதேபோல, பேருவளை துறைமுகத்திலிருந்து கடந்த 15ஆம் திகதி புறப்பட்ட "சுப பெத்தும்" (KLT 919) என்ற மீன்பிடிக் கப்பல், சீரற்ற காலநிலை காரணமாக 19ஆம் திகதி மீண்டும் துறைமுகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, எஸ். எம். சில்வா என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளார். அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வந்தாலும், இதுவரை மீட்கப்படவில்லை.
இவ்வாறான விபத்துக்களைத் தவிர்க்க உயிர் காக்கும் கவசங்களை அணிவது சட்டப்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தினார்.
நீர்கொழும்பு பகுதியில் மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான போதிலும், அதில் பயணித்த இரண்டு மீனவர்களும் உயிர் காக்கும் கவசங்களை முறையாக அணிந்திருந்ததால் நீந்திக் கரைசேர்ந்து உயிர் தப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம், உயிர் காக்கும் உபகரணங்களின் முக்கியத்துவத்தை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
மேலும், கடற்றொழில் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பதால் ஏற்படும் அனர்த்தங்கள் குறித்து கவலை தெரிவித்த பணிப்பாளர் நாயகம், "கடற்றொழில் தடையால் மீனவர்களின் அன்றாட வருமானம் பாதிக்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், உங்கள் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பளிப்பதே எமது முன்னுரிமை" என்று குறிப்பிட்டார்.
எனவே, மறு அறிவித்தல் வரும் வரை இந்த அபாயகரமான பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும், ஏனைய பகுதிகளில் உள்ள மீனவர்களும் காலநிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
