Our Feeds


Wednesday, October 29, 2025

Zameera

பெரிய வெங்காயக் கொள்வனவு நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன


 அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன. 

 

17 நிபந்தனைகளின் கீழ் நடைபெறும் இந்தக் கொள்வனவில், வெங்காயத்தின் அளவு, எடை மற்றும் தரம் தொடர்பான விதிகள் விவசாயிகளை அநாதரவத்திற்கு தள்ளியுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

 

அரசாங்கத்தின் கொள்வனவு நிபந்தனைகளின்படி, பெரிய வெங்காயத்தின் விட்டம் 35 மில்லிமீற்றரில் இருந்து 65 மில்லிமீற்றருக்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும். 

 

இதற்கு அப்பாற்பட்ட – அதாவது 65 மி.மீ.க்கு மேல் பெரிய அல்லது 35 மி.மீ.க்கு குறைவான சிறிய வெங்காயங்கள் – மொத்தத் தொகையின் 10 சதவீதத்தை (10%) தாண்டக்கூடாது. 

 

மேலும், ஒரு கிலோ வெங்காயத்தில் 8 காய்களுக்கு மேல் இருக்கக் கூடாது எனவும் தர நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிபந்தனைகள் தங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக மாத்தளை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த சில மாதங்களாக அறுவடை செய்த வெங்காயங்களை உரிய விலைக்கு விற்க முடியாமல், சில விவசாயிகளின் அறுவடைகள் வீடுகளிலேயே அழிந்து போயுள்ளன.

 

நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சதொச தலைவர் சமித் பெரேரா பேசுகையில், "மீண்டும் விற்பனை செய்யக்கூடிய மட்டத்தில் உள்ள உற்பத்திகள் மட்டுமே சதொச மூலம் கொள்வனவு செய்யப்படுகின்றன" என்று விளக்கினார். 

 

இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு ரூ.140 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

ஒரு விவசாயியிடமிருந்து அதிகபட்சம் 2,000 கிலோ வரை கொள்வனவு செய்யப்படுகிறது. 

 

இவ்வாறு அரச கொள்கையின் கீழ் சதொச மூலம் உள்ளூர் விவசாயிகளின் பெரிய வெங்காய அறுவடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

 

நேற்று முற்பகல் தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள அரசாங்கத்தின் வெங்காயக் கொள்வனவு களஞ்சியசாலைக்கு வருகை தந்த விவசாயிகள், இந்த வெங்காயக் கொள்வனவு நிபந்தனைகளால் தாம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தனர்.

 

நேற்று பிற்பகல் வரையிலும், தம்புளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் நிறுவப்பட்டுள்ள வெங்காயக் கொள்வனவு நிலையத்திற்கு எந்தவொரு விவசாயியும் வெங்காயத்தை விற்பனை செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »