இலங்கையின் நிவாரணப் பணிகளுக்காக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் உடன்பட்டிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவி, 2.35 மில்லியன் யூரோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அந்த நிவாரணப் பொருட்களின் ஒரு பகுதியை ஏற்றிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட சரக்கு விமானம் இன்று (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
போயிங்-747-400 (Boeing-747-400) ரகத்தைச் சேர்ந்த இந்த பாரிய சரக்கு விமானம், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகிய நாடுகளின் நிவாரணப் பொருட்களையே ஏற்றி வந்திருந்தது.
ஜேர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரணப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசாங்கத்திடமிருந்து மனிதாபிமான உதவிகளாகக் கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு இன்று கொண்டு வரப்பட்டன.
இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக இலங்கையிலுள்ள ஜேர்மனிய பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்றும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
