(எம்.மனோசித்ரா)
தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.
2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார்.
இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும்.
