Our Feeds


Tuesday, January 20, 2026

Zameera

பேர வாவியை 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தி அதனை நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு திட்டம்


 கொழும்பின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பேர வாவியை (Beira Lake) 2.5 பில்லியன் ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தி, அதனை நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கான பாரிய திட்டமொன்றை அதிகாரிகள் நேற்று அறிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் குறித்து கருத்து வெளியிட்ட பேர வாவி மறுசீரமைப்பு செயலணியின் தலைவர் சதுர கஹதஆராச்சி, “வாவியில் சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றி வந்த 192 இடங்களில் பெரும்பாலானவை தற்போது மூடப்பட்டுள்ளன.

இந்த கழிவுநீரினால் ஏற்பட்ட கடுமையான துர்நாற்றம் தற்போது பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

குறிப்பாக, சினமன் லைஃப் (Cinnamon Life) குடியிருப்புப் பகுதிகளில் நிலவிய கடும் துர்நாற்றத்திற்கு காரணமாக இருந்த கழிவுநீர்க் குழாய் கசிவுகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய பகுதிகளில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வாவியின் தரத்தை உயர்த்துவதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்குள் வாவியில் படிந்துள்ள கழிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

அதேநேரம், நீரில் ஒட்சிசன் அளவை அதிகரித்து மீன் இனங்கள் மீண்டும் செழித்து வளர ஏதுவாக நீர் ஊற்றுகள் மற்றும் காற்றோட்ட இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன.

தற்போது வாவியின் நீரின் தரம் ‘செம்மஞ்சள்’ நிலையில் உள்ளதாகவும், அதனை விரைவில் பாதுகாப்பான நிலைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த மறுசீரமைப்புத் திட்டத்துக்காக தனியாரினால் இரண்டு அதிநவீன சூரிய சக்திப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன.

சூரிய சக்தி மற்றும் மின்கலங்கள் மூலம் இயங்கும் இந்தப் படகுகள் மூன்று ஆண்டுகளுக்கு தூய்மைப்படுத்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »