டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட வெள்ளத்தினால் கொத்மலை நீர்த்தேக்கம் அமைந்துள்ள பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த நீர்த்தேக்கத்தில் பாரியளவில் சேறு மற்றும் மணல் மலைபோல் குவிந்து கிடக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் காணப்பட்ட மோசமான காலநிலை தாக்கத்தினால் ஏற்ப்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நிரம்பியுள்ள மணலை அபிவிருத்தி பணிகளுக்கென பயன்படுத்த முடியுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மண்சரிவினால் ரம்பொடகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெக்கோ இயந்திரம், இரண்டு லொறிகள், ஒரு வேன், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன காணாமல் போயுள்ளன.
இதுவரை அதன் சிறு பாகங்களைக் கூட கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது எனவும் குறித்த வாகனங்கள் அனைத்தும் நீரின் அடித்துச் சென்று நீர்த்தேக்கத்தில் அடியில் புதைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
எனவே மலை போல் குவிந்து இருக்கும் மண் கலந்த மணல்களை அகற்றினால் மாத்திரமே காணாமல்போன வாகனங்களை கண்டுபிடிக்க முடியும் எனவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
செ.திவாகரன்
