கிரீன்லாந்து தீவை கையகப்படுத்த வேண்டும் என்ற தனது
கோரிக்கையை நிராகரிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக வரி அச்சுறுத்தலை 100 சதவீதம் நிறைவேற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் தனது நிபந்தனைகளுக்கு அடிபணியாத பிரித்தானியா, டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 நேட்டோ (NATO) நாடுகளின் மீது கடும் வரிகளை விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்துப் பொருட்கள் மீதும் 10 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளது.
இந்த வரி ஜூன் மாதம் முதல் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் நடைமுறையில் இருக்கும் என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் பதிலடி
ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
"மிரட்டல் மூலம் கிரீன்லாந்தைச் சொந்தமாக்க முடியாது" என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென் தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்த மக்களும், டென்மார்க்கும் மட்டுமே தீர்மானிக்க முடியும் என வெளிவிவகாரச் செயலர் யெவெட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
இந்த மிரட்டல்கள் தொடர்பில் விவாதிக்க வியாழக்கிழமை பிரஸ்ஸல்ஸில் அவசர மாநாட்டை நடத்தவுள்ளது.
நோர்வே பிரதமருடனான குறுஞ்செய்தி உரையாடலில், தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காததற்கு நோர்வே தான் காரணம் என ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். தனக்கு பரிசு கிடைக்காததால், தான் இனி "அமைதியைப் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை" எனவும், அமெரிக்காவின் நலனுக்காக எதையும் செய்வேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரீன்லாந்தில் உள்ள பிட்டுஃபிக் (Pituffik) விண்வெளித் தளத்திற்கு மேலதிகமாக விமானங்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது. இது வழக்கமான நடவடிக்கை எனக் கூறப்பட்டாலும், ட்ரம்பின் "கருத்து சொல்ல விரும்பவில்லை" (No comment) என்ற பதில், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
