கல்விக்கு முன்னுரிமை அளித்து, பிள்ளைகளுக்கு சமத்துவமான கல்வியை வழங்க முயற்சிக்கும் இரண்டு நாடுகளாக சீனாவையும் இலங்கையையும் அறிமுகப்படுத்தலாம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சீனா மூலம் பாடசாலை சீருடைகளுக்கான துணிகளை இலவசமாக வழங்கும் நிகழ்வில் இன்று (13) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாட்டில் தரமான கல்வியைப் பேணுவதற்கு சீன அரசிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு பாரிய சக்தியாக உள்ளதென்றும், அதன் மூலம் நாட்டின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமத்துவமாக கல்வியைக் கற்கும் வாய்ப்பு கிடைப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பல வருடங்களாக பாடசாலை சீருடைத் துணிகளை வழங்குவதற்கு சீனா அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையைத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
நாடு எதிர்கொள்ளும் ஒவ்வொரு கடினமான சந்தர்ப்பத்திலும் சீன அரசாங்கம் இலங்கைக்கு தைரியம் அளிப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் சார்பாக இந்த பாடசாலை சீருடைத் துணித் தொகுதியை நன்கொடையாக வழங்கியமைக்கு சீன அரசுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
கல்வியை அடிப்படையாகக் கொண்ட இந்த ஒத்துழைப்பு, எதிர்காலத்திலும் இரு தேசங்களுக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
