Our Feeds


Friday, February 20, 2026

Zameera

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ விடுவிப்பு


 அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். 


நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும், பெர்க்சையர் மற்றும் நோர்போக்கில் உள்ள சில முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தது. 


அண்ட்ரூவின் கைது குறித்துப் பதிலளித்த மூன்றாம் சார்ள்ஸ் மன்னர், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என்றும், பொலிஸாருக்கு தனது முழுமையான மற்றும் இதயப்பூர்வமான ஆதரவும் ஒத்துழைப்பும் உண்டு என்றும் தெரிவித்தார். 


மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான தொடர்பு மற்றும் ரகசியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக அண்ட்ரூவிடம் விசாரணை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பொலிஸ் முன்னதாகத் தெரிவித்திருந்தது. 


அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்களின் தொகுப்பில் இவர்கள் இருவருக்கும் இடையிலான தொடர்பாடல்கள் இடம்பெற்றிருந்தன. 


எவ்வாறாயினும், அந்த நபர் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தேம்ஸ் வேலி பொலிஸார் உறுதிப்படுத்தியது. 


இந்நிலையில் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறிய முன்னாள் இளவரசர், வாகனத்தின் பின் இருக்கையில் சாய்ந்தபடி அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. 


அண்ட்ரூ கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். அவர் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதைத் தொடர்ந்து உறுதியாகவும் கடுமையாகவும் மறுத்து வருகிறார். 


ஒரு முழுமையான மதிப்பீட்டைத் தொடர்ந்து, தற்போது முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தேம்ஸ் வேலி பொலிஸார் தெரிவித்தது. 


மேலும், 2010 ஆம் ஆண்டில் அண்ட்ரூவுடன் பாலியல் ரீதியான சந்திப்பிற்காக எப்ஸ்டினால் இரண்டாவது பெண் ஒருவர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார் என்ற தனிப்பட்ட குற்றச்சாட்டு குறித்தும் தாம் ஆராய்ந்து வருவதாக பெப்ரவரி தொடக்கத்தில் பொலிஸ் தெரிவித்திருந்தது. 


பிரித்தானியர் அல்லாத அந்தப் பெண், அந்தச் சமயத்தில் 20 வயதுகளில் இருந்துள்ளார். 


அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், உள்துறை அமைச்சுக்கு தேம்ஸ் வேலி பொலிஸ் முன்கூட்டியே தகவல் வழங்கியிருந்ததாக பிபிசி செய்தி சேவை தகவல் வௌியிட்டுள்ளது. 


எவ்வாறாயினும் இடம்பெற்ற இந்தக் கைது நடவடிக்கை, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »