Our Feeds


Friday, February 13, 2026

Zameera

பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடத்தை நிரப்ப துரித நடவடிக்கை


 பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை இவ்வருடத்தின் நடுப்பகுதிக்குள் நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இன்று (12) பாடசாலைகளுக்கு விஜயம் செய்ததன் பின்னர், பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 


அதேநேரம் உயர்தர வகுப்பு மாணவர்களின் பாடசாலை வரவானது தற்போது குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. 


எனினும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக இந்நிலைமையில் மாற்றம் ஏற்படும். 


புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் மிக முக்கியமான தரப்பினர் ஆசிரியர்களே ஆவர். 


பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைப் பெற்றுக்கொடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 


ஒரு நாடாக எதிர்பார்க்கும் முழுமையான மாற்றத்தை அடைந்துகொள்வதற்குத் தகுதியான மனித வளம் அவசியமானது என்றும், அதற்காகப் பிள்ளைகளுக்கு முறையான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் 


நாகரிகமான சமூகத்தைக் கட்டியெழுப்ப ஆசிரியர்கள் வழங்கும் பங்களிப்பை அரசாங்கம் மதிப்பதாகத் தெரிவித்த பிரதமர், ஆசிரியர்களின் தொழில்சார் நிபுணத்துவத்தைப் பாதுகாப்பதற்கும் தரமான கல்வியை உறுதிப்படுத்துவதற்கும் 'கல்விப் பேரவை' ஒன்றினை நிறுவுவதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 


பாடசாலைகளுக்கு இடையே காணப்படும் உட்கட்டமைப்பு வசதிகளின் ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் சம வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்காகும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »