இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் நிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவருக்குத் தெரிந்த தகவல்களை விட அரசாங்கத்திற்குப் பல தகவல்கள் தெரியும் எனவும், பிரச்சினையைத் தீர்க்கவும், உயிர் சேதங்களைக் குறைக்கவும், பிராந்திய அமைதியைப் பாதுகாக்கவும் தேவையான தலையீடுகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் விரிவான அறிக்கையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
ஒரு நாடாக இலங்கை சர்வதேச அமைதிக்காகச் செயற்படுகிறது. இந்தியப் பெருங்கடலின் அமைதியே எமது எதிர்பார்ப்பாகும்.
கூறப்பட்டதை விட அதிகமான விடயங்கள் தற்போது இந்தியப் பெருங்கடலில் நடந்து கொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் சர்வதேச சட்டங்களுக்கு அமையவும் மனிதாபிமான அடிப்படையிலும் தலையிட்டு வருகின்றோம்.
நாம் சர்வதேச சாசனங்களுக்கு அமைவாக, உயிர்ச் சேதங்களைக் குறைக்கும் வகையிலும், இந்தியப் பெருங்கடலில் அமைதியைப் பாதுகாக்கும் வகையிலும் பொறுப்புடன் செயற்படுகின்றோம் என அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
