குறித்த படகு அடுத்த இரண்டு நாட்களுக்குள் கரைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், அதனுள் கணிசமான அளவு ஆயுதங்களும் பாதுகாப்புக் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கைக்கு தெற்கே உள்ள ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த படகு பொறுப்பேற்கப்பட்டது.
இதேவேளை, கடந்த 7ஆம் திகதியும் தெற்கு கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனையில் மற்றுமொரு படகு கைப்பற்றப்பட்டது. அது திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதிக்கப்பட்ட போது, அதனுள் 102 கிலோ ஹெரோயின் மற்றும் 900 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த 6 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.
இன்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால:
"போதைப்பொருள் விநியோக வலையமைப்பை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருளுக்கு அடிமையான பிரஜைகளை மீட்டெடுக்கும் அதேவேளை, சமூகத்தையும் நாம் சுத்தப்படுத்த வேண்டும். இந்த விநியோக வலையமைப்பு திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் பிணைந்துள்ளது. இதனை முற்றாக ஒழிப்பதற்காக இலங்கை பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்" எனக் குறிப்பிட்டார்.
