அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வியாழக்கிழமையன்று ஆக்ஸியோஸ் (Axios) தளத்திடம் கூறுகையில், ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
“கமேனியின் மகன் எனக்கு ஏற்றுக்கொள்ள முடியாதவர். ஈரானுக்கு நல்லிணக்கத்தையும் அமைதியையும் கொண்டு வரும் ஒருவரை நாங்கள் விரும்புகிறோம்,” என்று ஒரு நேர்காணலில் ட்ரம்ப் கூறியதாக ஆக்ஸியோஸ் மேற்கோளிட்டுள்ளது.
“வெனிசுலாவில் டெல்சி (ரோட்ரிக்ஸ்) விவகாரத்தைப் போலவே, இந்த நியமனத்திலும் நான் ஈடுபட வேண்டும்,” என்று ட்ரம்ப் கூறினார்.
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இருந்து அவரது மகன் மொஜ்தபா கமேனி உயிர் பிழைத்துள்ளதாக ஈரானிய வட்டாரங்கள் புதன்கிழமை ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
இதற்கிடையில், தெஹ்ரானுக்கு தென்மேற்கே உள்ள பரந்த் நகரில் உள்ள இரண்டு பாடசாலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஏவிய ஏவுகணைகள் தாக்கியதாக அல் ஜசீரா செய்தியை மேற்கோள் காட்டி ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
தெற்கு நகரமான மினாப்பில் உள்ள பெண்கள் பாடசாலை மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 165 மாணவிகள் மற்றும் ஊழியர்கள் (பெரும்பாலானோர் 7 முதல் 12 வயதுடையவர்கள்) கொல்லப்பட்டு, குறைந்தது 95 பேர் காயமடைந்த ஆறு நாட்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக ஃபார்ஸ் தெரிவித்துள்ளது.
மினாப் தாக்குதலானது, ஈரானுக்கு எதிரான விரிவான அமெரிக்க-இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்துடன் ஒத்துப்போனதாகவும், அது முதல் மத்திய கிழக்கு முழுவதும் மோதல்கள் தூண்டப்பட்டுள்ளதாகவும் ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி எக்ஸ் (X) தளத்தில் கூறுகையில், “சில அமெரிக்க அதிகாரிகள் சில ஆயிரம் வீரர்களுடன் ஈரானுக்குள் தரைவழியாக நுழைய உத்தேசித்துள்ளதாகக் கூறியுள்ளனர்” என்றார். “ஈரானிய மண் அரக்கர்களின் நரக நடனத்திற்கான இடமல்ல” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
