Our Feeds


Friday, March 6, 2026

Zameera

நுவரெலியாவில் உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம் : அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் – ஜீவன் தொண்டமான்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)


நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,


நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் பிரேத பரிசோதனையின் பின்னர் அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் மூவர் இரவு நேரத்தில் பூட்டை உடைத்துக்கொண்டு அந்த பிரேதம் இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இங்கு நடந்தது என்ன? இதன் உண்மை என்ன? என்பதனை கண்டுபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த பிரச்சினையை வெளியில் கொண்டுவருவதற்கு விரும்பவில்லை என்றாலும் இது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட பிரச்சினை கிடையாது. ஒரு சமூகத்திற்கு ஆபத்தான விடயமே. இங்கு நடந்தது என்ன என்று அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும்.


அந்த வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் ஒருவர் வழங்கியுள்ள ஊடக அறிக்கையில், மூவர் அந்த சடலம் இருந்த பகுதிக்கு சென்றுள்ளனர். இதன்பின்னர் அந்த உடல் வைத்திருந்ததை போன்று இருக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் இதில் சந்தேகம் எழுகின்றது. இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உண்மையாக இருந்தால் இதற்கு முன்னர் நடந்துள்ளதா என்ற சந்தேகங்களும் எழும். இதனால் இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றேன் என்றார். 

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »