Our Feeds


Sunday, March 15, 2026

SHAHNI RAMEES

தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

 

தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து வண்டிகளுக்கான எரிபொருள், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான வாகனங்களுக்கு, உரிய நிறுவனங்களுடன் இணைந்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ் எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. 

 

இதேவேளை, நாட்டின் நிலைமையைக் கருத்திற் கொண்டு அநாவசியமான முறையில் எரிபொருளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 

மொரட்டுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இக்காலப்பகுதியில் அநாவசியமான பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். 

 

"அரசாங்கம் என்ற ரீதியில் ஒட்டுமொத்த மக்களிடமும் நாம் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால், இந்த நேரத்தில் உங்களது குடும்பத்தைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் நாடு குறித்தும் சிந்தியுங்கள். எனவே, எரிபொருள் நுகர்வை ஒரு நியாயமான அளவில் பேணுங்கள். வீட்டில் எரிபொருள் இருக்கிறது என்பதற்காக வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக, அதனை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலாண்மை செய்துகொள்ளுங்கள்" என அவர் மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »