அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வராமலும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க நடவடிக்கை எடுக்காமலும் இருந்தால், ஈரான் தனது மின் உற்பத்தி நிலையங்களையும் எண்ணெய் வயல்களையும் வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதிபர் தனது 'ட்ரூத் சோஷியல்' கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"ஈரானில் நமது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர, மிகவும் நியாயமான ஒரு புதிய ஆட்சியுடன் அமெரிக்கா தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், ஏதேனும் ஒரு காரணத்தால் விரைவில் ஒரு உடன்பாட்டிற்கு வர முடியாமலும், ஹோர்முஸ் நீரிணை உடனடியாகப் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமலும் போனால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் இதுவரை நாம் தொடாத அதன் அனைத்து கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகளையும் வெடிவைத்துத் தகர்த்து முற்றிலுமாக அழித்து போரை முடிவுக்குக் கொண்டு வருவோம்."
மேலும், ஞாயிற்றுக்கிழமை (29) இரவு 'ஃபைனான்சியல் டைம்ஸ்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ஈரானின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்திருந்தார்.
ஈரானின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதி மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவது குறித்து அவர் பரிசீலித்து வருவதாகவும், எண்ணெயைப் பெறுவதே தனது இலக்கு என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிக்கைகளைத் தொடர்ந்து, திங்கட்கிழமை (30) உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 116 டாலரைத் தாண்டியமை குறிப்பிடத்தக்கது.
