Our Feeds


Thursday, March 12, 2026

Zameera

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட பேருந்து சேவை


 

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.



‘அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் மானுட கௌரவத்தைப் பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையை யதார்த்தமாக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.



430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், வெறும் போக்குவரத்துச் சேவை மட்டுமல்லாது, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தினால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் நலத்திட்ட வரிசையில் மற்றுமொரு விசேட திட்டமாகும். பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் உள்ள பௌதிகத் தடைகளை நீக்கி, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்துடன் ஒன்றிணைவதற்கான பின்னணியை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும்.



முதற்கட்டமாக, சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்கள் இலகுவாக ஏறி இறங்கக்கூடிய தாழ்தள வசதி கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பஸ்கள் நேற்று முன்தினம் (10) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. இவை எதிர்வரும் சனிக்கிழமை கொழும்புக்குக் கொண்டு வரப்பட்டு 'மெட்ரோ பஸ்' நிறுவனத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்படவுள்ளன.



33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பஸ் ஒன்றில் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன.



ஒரு முன்னோடித் திட்டமாக இச்சேவை மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும். அதன்படி, மாகும்புரவிலிருந்து புறக்கோட்டை வரையிலும், மாகும்புரவிலிருந்து கடவத்தை வரையிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கு ஒருமுறை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.



குறிப்பாக மகரகம அபேக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகிய பிரதான சுகாதார மையங்களை நேரடியாக உள்ளடக்கும் வகையில் இந்த போக்குவரத்துத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

இச்சேவைக்காகத் தெரிவுசெய்யப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் 28 சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு விசேட பயிற்சி வழங்கப்படவுள்ளது. சமூக சேவைகள் அமைச்சினால் வழங்கப்படும் இப்பயிற்சியில் பஸ் தொழில்நுட்பம், பயணிகள் பாதுகாப்பு, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் தொடர்புகொள்வதற்கான சைகை மொழி ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன.



இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைக் கருத்திற்கொண்டு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் 100 பஸ்களை நாட்டுக்குக் கொண்டு வந்து பொதுப் பயணிகள் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.



இதனுடன் இணைந்ததாக, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் பஸ் நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகள் இலகுவாக அணுகக்கூடிய தரங்களுக்கு ஏற்ப புனரமைக்கவோ அல்லது புதிதாக நிர்மாணிக்கவோ திட்டமிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »