Our Feeds


Monday, March 23, 2026

Zameera

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் - எந்த சந்தர்ப்பத்திலும் உதவத் தயார் - இலங்கைக்கான ஈரான் தூதுவர்

 

இலங்கை ஈரானின் மிக நெருங்கிய நண்பன் என்றும், எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்நாட்டிற்கு உதவ ஈரான் தயாராக இருப்பதாகவும் இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். 

இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை எரிபொருள் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக உள்ளது என்றார். ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தனது நட்பு நாடுகளுக்காக மூடவில்லை என்பதையும் அவர் இங்கு வலியுறுத்தினார். 

இலங்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாவதை ஈரான் ஒருபோதும் விரும்பாது என்றும், ஈரான் தேசத்திற்கு இலங்கை மிகவும் மரியாதைக்குரிய நாடு என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

அண்மையில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானின் 'IRIS Dena' போர்க்கப்பலில் இருந்தவர்களை மீட்பதற்கு, ஈரான் கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே இலங்கை நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையின் அந்த உதவியை இச்சந்தர்ப்பத்தில் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். 

இதேவேளை, ஈரானில் உள்ள இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்ப விரும்பினால், அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்க ஈரான் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தூதுவர் மேலும் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »