லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – அட்டன் பிரதான
வீதியில் வெள்ளிக்கிழமை (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது இதில் லொறியின் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை ஆரம்ப வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் லொறி சாரதியிடம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்கொண்ட வைத்திய பரிசோதனையில் சாரதி ஹெரோயின் போதைப்பொருள் பாவனை செய்து வாகனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சாரதி சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என லிந்துலை பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெல்லவாயாவிலிருந்து அட்டன் எபோட்ஸ்லி தோட்டத்திற்கு விறகு ஏற்றிச் சென்ற லொறி ஒன்று பிரதான வீதியிலிருந்து விலகி சுமார் 100 அடி ஆழமுள்ள தேயிலைத் தோட்டத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
