கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் ஜெயிலர் ஒருவர் மற்றும் இரண்டு சிறைக்காவலர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளுக்கும் சிறைக்காவலர் ஒருவருக்கும் இடையே நேற்று (27) முற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவர் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு-14, நவகம்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
