அமெரிக்கா முன்வைத்துள்ள ஒப்பந்தத்தை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் சிவில் உட்கட்டமைப்புகளை அழிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அவர் தனது ட்ரூத் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“ஈரான் நேற்று ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச்சூடு நடத்த முடிவு செய்தது. இது எமது போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக மீறும் செயலாகும். எனது பிரதிநிதிகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குச் செல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்காக அவர்கள் நாளை மாலை அங்கு இருப்பார்கள்.
சமீபத்தில் ஈரான் அந்த நீரிணையை மூடுவதாக அறிவித்தது. மேலும் இந்த பாதை மூடப்படுவதால் அவர்கள்தான் ஒரு நாளைக்கு 500 மில்லியன் டொலர்களை இழக்கிறார்கள். அமெரிக்கா எதையும் இழக்கவில்லை. சொல்லப்போனால், பல கப்பல்கள் இப்போது அமெரிக்காவின் டெக்சாஸ், லூசியானா மற்றும் அலாஸ்காவை நோக்கி சரக்குகளை ஏற்ற சென்று கொண்டிருக்கின்றன. எப்போதும் "கெட்டிக்காரனாக" இருக்க விரும்பும் IRGC-க்கு எனது பாராட்டுகள்.
நாங்கள் மிகவும் நியாயமான மற்றும் சரியான ஒரு ஒப்பந்தத்தை வழங்குகின்றோம். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என நான் நம்புகின்றேன். ஏனெனில் அவர்கள் அதை ஏற்காவிட்டால், ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் அமெரிக்கா தகர்த்துவிடும். இனி மென்மையான அணுகுமுறை கிடையாது. அவை மிக வேகமாகவும் எளிதாகவும் தகர்க்கப்படும். அவர்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், கடந்த 47 ஆண்டுகளாக ஏனைய ஜனாதிபதிகளால் ஈரானுக்குச் செய்திருக்க வேண்டியதைச் செய்வது எனக்குக் கௌரவமாக இருக்கும். ஈரானின் இந்த அழிவு முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது” என பதிவிட்டுள்ளார்.
