கட்சியின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை ஜனாதிபதி ஒரு மோசடியாகக் கருதவில்லை என்றால், ஜனாதிபதியும் அதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தின் கொள்கையும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கையைப் போன்றதே. ஒரு நபர் மற்றவரின் பையைத் திருடிவிட்டு இதோ திருடன், இதோ திருடன் என்று கூச்சலிட்டபடி ஓடுவார்.
கிராமத்தில் உள்ள அனைவரும் அந்த திருடனைப் பிடிக்க திருடனுக்குப் பின்னால் ஓடுவார்கள். ஆனால் இறுதியில் பார்த்தால், யார் மற்றவரை திருடன் என்று சொன்னாரோ அவரே உண்மையாக திருடியிருப்பார்.
இந்த அரசாங்கமும் அப்படித்தான். இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, நிலக்கரி மோசடி செய்தவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதை நாம் அனைவரும் காண்கிறோம்.
ஜனாதிபதியின் ஒவ்வொரு கூற்றையும், அவரது நடத்தையையும், அவர்களைப் பாதுகாக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்க்கும்போது, இந்த நிலக்கரி மோசடியின் பின்னணியில் ஜனாதிபதி இருப்பது தெளிவாகிறது.
ஏனெனில், சம்பந்தப்பட்ட நபர் தற்போதைய ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த காலத்திலேயே அமைச்சிற்கு கொண்டு வரப்பட்டார்.
அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவர் மீது பின்னர் ஒரு மோசடி தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நிகரான ஒரு மோசடியே தற்போதைய நிலக்கரி கொள்வனவிலும் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்தபோது அரசாங்கத்தின் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை, தற்போது அமைச்சரவை அமைச்சராக்கி, தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்து, தொடர்ந்தும் அவரைப் பாதுகாக்கிறார்கள் என்றால் - இது ஜனாதிபதிக்கு ஒரு மோசடியாகத் தெரியவில்லை என்றால் - இந்த மோசடியின் பின்னணியில் இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களே இருக்கிறார் என்பது மிகத் தெளிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
