Our Feeds


Sunday, April 19, 2026

SHAHNI RAMEES

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு!


மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இந்திய வீடமைப்பு திட்டத்தின் மூன்றாம் கட்டம் உத்தியோகப்பூர்வமாக இன்று (19) நிறைவடைந்துள்ளது. 


குறித்த வீடமைப்புத் திட்டத்தின் கீழ் பெருந்தோட்டப் பகுதிகளில் 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் முயற்சியில் இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்கி வருகின்றது. 


அவற்றில் முதல் இரண்டு கட்டங்களின் கீழ் 46,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டன. 


இந்நிலையில் 4000 வீடுகளைக் கொண்ட மூன்றாம் கட்ட வீடமைப்பு திட்டமானது ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் உள்ள மலையகப் பகுதிகளை மையமாக கொண்டு முன்னெடுக்கப்பட்டது. 


அதனூடாக 3855 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். 


கொவிட் -19 மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திட்டத்தை நிறைவு செய்வதற்கான நிதியை வீடொன்றுக்கு 2.8 மில்லியன் ரூபாவாக, இந்திய அரசாங்கம் அதிகரித்தமையினால் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடிந்துள்ளது. 


அதனடிப்படையில் மூன்றாம் கட்டத்தின் கீழ் மாத்தளை மற்றும் காலி மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட எஞ்சிய 145 வீடுகளும், இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் தலைமையில் நிகழ்நிலை ஊடாக மக்கள் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது. 


அதேநேரம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதி மொழிக்கு அமைய 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் 4 ஆம் கட்ட நிர்மாணப்பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »