Our Feeds


Wednesday, April 1, 2026

Zameera

அரசாங்கம் மீது GMOA குற்றச்சாட்டு


 தற்போதைய அரசாங்கமும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவும், வைத்தியர்களிடமிருந்து வலுக்கட்டாயமாகச் சேவையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தமது சங்கத்தைச் சேர்ந்த 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அவ்வாறு அடிமைகளாகப் பணியாற்றத் தயாரில்லை என அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்

"மே 10ஆம் திகதியளவில் சுமார் 6,000 வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். பெப்ரவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முறையான இடமாற்றச் செயல்முறை கடந்த 13 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இடமாற்றச் சபைகளில் இருந்துகொண்டு, அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் 13 முதல் 17 வருடங்கள் வரை ஒரே இடத்திலேயே தங்கியிருந்தனர். கண் வைத்தியசாலையில் இருந்துகொண்டு வீதியைக் கடந்து தேசிய வைத்தியசாலைக்குக் கூடச் செல்ல முடியாமல் சிலர் முடங்கிக்கிடந்தனர். இவ்வாறான அனைத்து முறைகேடுகளையும் நிறுத்திவிட்டு, தற்போது வருடாந்த இடமாற்றச் செயல்முறையை முன்னெடுத்து வருகிறோம். இதனால் பாதிக்கப்படுபவர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தமது நிறைவேற்றுச் சபை உறுப்பினர்களையும், மனைவிகளையும் தமக்கு விருப்பமான இடங்களிலேயே பல வருடங்களாகத் தங்கவைத்திருந்தவர்களே ஆகும்."

அமைச்சரின் இந்தக் கருத்துகளுக்குப் பதிலளித்த வைத்தியர் ஹங்சமால் வீரசூரிய தெரிவித்ததாவது:

"சுகாதார அமைச்சர் பல பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். ஏப்ரல் 1ஆம் திகதி என்பதால் அவர் பொய் சொல்கிறாரா என்று தெரியவில்லை. 2019ஆம் ஆண்டில் தேங்கிக்கிடந்த பெருமளவிலான இடமாற்றங்களை எமது சங்கமே முன்னின்று 98 சதவீத வெற்றிகரத்துடன் பூர்த்தி செய்தது. 2026ஆம் ஆண்டின் வருடாந்த இடமாற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், 6,000 பேரில் ஐந்தில் ஒரு பங்கினரைக் கூட இன்னும் இடமாற்ற முடியவில்லை. இதிலிருந்தே சுகாதார அமைச்சு எவ்வளவு தூரம் தோல்வியடைந்துள்ளது என்பது புரிகிறது. வைத்தியர்கள் யாருடைய கட்டளைக்கும் பணிய மாட்டார்கள். நாம் யாருக்கும் கடமைப்பட்டவர்களும் அல்ல, யாருக்கும் அஞ்சியவர்களும் அல்ல. 23,000க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் அடிமைகளாக வேலை செய்யத் தயாரில்லை. அமைச்சர் எம்முடன் மோத விரும்பினால், அதற்குப் பதில் வழங்க நாம் தயாராகவே இருக்கிறோம்."


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »