Our Feeds


Sunday, April 5, 2026

Zameera

சுகாதார அமைச்சருக்கு GMOA வழங்கிய அவகாசம்


 வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு, சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு நாளை (06) காலை 8.00 மணி வரை அவகாசம் வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 


சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அமைச்சர் தயக்கம் காட்டுவதாகவும், அதன் காரணமாகவே இந்தப் போராட்ட நடவடிக்கை நீடிப்பதாகவும் அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். 


அமைச்சரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை குறித்த அடுத்தகட்ட தீர்மானத்தை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இது குறித்து வைத்தியர் பிரபாத் சுகததாச மேலும் கருத்து தெரிவிக்கையில், 


நோயாளிகளை அசெளகரியத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று நாம் ஏற்கனவே சுகாதார அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 


சுகாதார அமைச்சர் தீர்மானங்களை எடுக்கத் தயங்குவதாலேயே தற்போது நோயாளிகளுக்கான சிகிச்சை சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 


அவர் பேச்சுவார்த்தை மேசைக்கு வரத் தயார் என்று அறிவித்தால், அந்த நிமிடத்திலிருந்தே தொழிற்சங்க நடவடிக்கையிலிருந்து விலகுவது குறித்து எம்மால் தீர்மானிக்க முடியும். 


அவர் முடிவுகளை எடுக்கத் தாமதித்தால் அதன் பாதிப்புகளை இந்நாட்டு நோயாளிகளே அனுபவிக்க வேண்டியிருக்கும். 


அதனால்தான் நாளை காலை 8 மணி வரை சுகாதார அமைச்சருக்கு அவசியமான தலையீட்டை மேற்கொள்ள அவகாசம் வழங்கியுள்ளோம். 


இது தொடர்பாக ஜனாதிபதிக்கும் நாம் தெரியப்படுத்தியுள்ளோம். நாளை காலை 8 மணிக்குள் அவர் இணக்கம் தெரிவித்தால், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதா? இல்லையா என்பதை எமது நிறைவேற்று சபை ஊடாகத் தீர்மானிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »