'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு கிடைத்த பணம் திறைசேரியில் பாதுகாப்பாக இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த நிதியம் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விசேட விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு 9,583 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதில் 49 நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் தமது பங்களிப்புகளை வழங்கியுள்ளதாக கலாநிதி அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.
'டித்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 500 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டது.
இதற்காக 'Rebuilding Sri Lanka' நிதியத்திலுள்ள 10 பில்லியன் ரூபாய் பணத்தையும் பயன்படுத்த முடியும் எனவும், ஏனைய 490 பில்லியன் ரூபாயை மாத்திரமே அரசாங்கம் மேலதிகமாகப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த நிதியம் தொடர்பில் சில தரப்பினர் முன்வைக்கும் கருத்துக்கள் முற்றிலும் உண்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது நடைமுறையிலுள்ள சட்டதிட்டங்களுக்கு அமைவாகவே இந்த நிதி பயன்படுத்தப்படும் என தொழிலாளர் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மேலும் தெரிவித்தார்.
