தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று வெள்ளிக்கிழமை (22) நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு லெபனானில் இரு இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் ஹனுயே கிராமத்துக்கு குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் இஸ்லாமிய சுகாதார சங்கத்தைச் சேர்ந்த 4 மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதன் பின்னர், டயர் மாகாணத்தில் உள்ள டெய்ர் குவானன் அல் நஹ்ர் கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு சிறுமி, 2 மருத்துவ பணியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சிரியாவைச் சேர்ந்த சிறுமியும் ஹிஸ்புல்லாவின் நட்பு அமைப்பான அமல் இயக்கத்தைச் சேர்ந்த 2 மருத்துவ பணியாளர்கள் இறந்துவிட்டதாக குறிப்பிடப்படுகிறது,
இஸ்ரேல் - லெபனான் இடையே தொடர்ச்சியாக போர் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் அந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்படும் வகையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது.
எனினும், லெபனானின் எல்லைப் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாகவே நேற்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
