(செ. சுபதர்ஷனி)
பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில், அவரின் 5 வங்கி கணக்கு விபரங்களையும் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (12) உத்தரவிட்டது.
முன்னாள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அவர் மேற்படி உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சருக்கு எதிராக பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய, வங்கி கணக்கு விபரங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குற்றவரும்படி விசாரணைப் பிரிவினர் மன்றில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மனுஷ நாணயக்காரவின் ஒரு அரச வங்கி மற்றும் நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்களும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் குறித்த வங்கி கணக்குகள் தொடர்பான விபரங்களை 14 நாட்களுக்குள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் குற்றவரும்படி விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு மேலதிக விபரங்களை மன்றுக்கு அறிவித்த விசாரணை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார 2011, 2013, 2015 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்குரிய தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.
